Friday, October 3, 2014

ஆரோக்கிய வாழ்விற்கு ஒரு ஆராய்ச்சி மையம் - millet

அடுத்த மாதம் மருத்துவரைப் பார்க்க இந்த மாதமே முன்பதிவு செய்யவேண்டும், அவ்வளவு பிரபலமான மருத்துவராம். சரி எப்படியோ ஒரு மாதம் கழித்து பார்த்தாலும் உடல்நிலை நன்றாகஆனால் சரி. எப்படியும் மருத்துவரைப் பார்க்கும் நாளன்று சீக்கிரமே கிளம்பி விடுவோம். மதிய உணவு கூட வெளியில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று பேசுபவர்களை நாம் அதிகமாகப் பார்க்க முடிகிறது.
இப்படிப்பட்ட மருத்துவர்களின் நடுவே, எங்களிடம் வருபவர்களுக்கு முதலில் ஆரோக்கியத்தைத்தான் நாங்கள் சொல்லிக் கொடுக்கிறோம். அதனால்தான் எங்கள் சேவை மையங்களை மருத்துவமனை என்று சொல்லாமல் “ஆரோக்கிய மையம்” என்று சொல்கிறோம். எங்கள் ஆரோக்கிய மையங்களில் (Health centers),எங்களைச் சுற்றி நோயாளிகளை விட ஆரோக்கியமானவர்களையே பார்க்க விரும்புகிறோம் என்று இரண்டு மருத்துவர்கள் சொன்னால் நமக்கு ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
அப்படி இரண்டு மருத்துவர்களையும்,அவர்கள் நடத்தும்,அவர்களோடு இணைந்து செயல்படும் நிறுவனங்களைப் பற்றியும்தான் நாம் இந்தத் தொடரில் பார்க்கப்போகிறோம். இந்த விசயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமானால் நாம், மருத்துவர் திரு.உஸ்மான் அலி அவர்களையும்,மருத்துவர் திரு.திருநாராயணன் அவர்களையும் பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.
வைத்தியர் என்பது வெறும் அடைமொழிச் சொல் அல்ல. படித்து வாங்கிய பட்டம் என்பதற்கு மேல், இதற்கு இன்னமும் பொருள் இருக்கிறது. பண்டைக் காலத்தில் வாழ்க்கைமுறை, பண்பாடு, கலாச்சாரம், ஆன்மீகம், நோய்நீக்கம், விவசாயம் (உழுவுதல், நடவு செய்தல், அறுவடை செய்தல்), நல்லநாள், முகூர்த்தம் பார்த்தல், சோதிடம் என்று எல்லாம் தெரிந்தவரையே வைத்தியர் என்றார்கள். இந்த வித்தைகளை எல்லாம் நன்றாகக் கற்றவரே வைத்தியர் என்று அழைக்கப்பட்டார். இப்படிப்பட்ட வைத்தியர்களுக்கு சமூகத்தில் ஒரு உயரிய மதிப்பு இருந்தது. வைத்தியமும்,சோதிடமும் ஒன்றையொன்று சார்ந்த துறைகளாகவே இருந்தது. இப்பொழுதும் கூட திபெத்தியர்களின் மருத்துவ கல்லூரி “Tibetan Medical and astrological institute”என்றுதான் அழைக்கப்படுகிறது.
இவற்றில் சித்தவைத்தியம்,பாரம்பரிய வைத்தியம் ஆகிய முறைகளை தமிழ்நாட்டில் கொண்டுவர மருத்துவர்.திரு.உஸ்மான் அலியும்,மருத்துவர் திரு.திருநாராயணனும் ஏற்படுத்திய அமைப்புதான் “பாரம்பரிய மருத்துவ முறைகளும் அதன் ஆராய்ச்சியும்“Centre for traditional medicine and research”(CTMR) என்று இந்த அமைப்பை சுருக்கமாக அழைக்கலாம்.
உயரிய நோக்கங்களுடன் 2000-வது ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு இன்று தன்னுடைய14 வது வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
மருத்துவர் திரு.உஸ்மான் அலியும்,மருத்துவர் திரு.திருநாராயணனும்CTMRன் நோக்கங்கள் என்ன என்பதில் மிகவும் திடமாகவும்,தெளிவாகவும் இருக்கிறார்கள்.
அவை
1. மரபு வழி மருத்துவம் (traditional medicines)
2. பொது சுகாதாரத்தை, பாரம்பரிய முறையில் நடைமுறைக்குக் கொண்டுவருவது.
3. பாரம்பரிய மருந்துகளைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
4. எல்லோரும் வாங்கும்படி விலைகுறைவாகவும் (cost effective),தரமாகவும் (Quality)உள்ள மருந்துகளை தயாரித்தல்.
5. பாரம்பரிய மருந்துகளில் ஆய்வு மேற்கொள்ளுதல் (Research).
6. பாரம்பரிய மருத்துவ அறிவை ஆவணப்படுத்துதல் (Documentation of ancient medicines)
இந்த ஆவணப்படுத்தும் முறையில் முதலில் வருபவை:
பனை ஓலைச்சுவடிகள்தான் (Palm manuscripts)பழங்காலத்து ஓலைச்சுவடிகளை முதலில் சேகரித்து அவற்றை முறைப்படுத்துதல்,அவற்றிலிருந்து பொருள் அட்டவணை தயார் செய்தல் (catalogue),அவற்றை பாதுகாக்கும் வழிமுறையை பின்பற்றுதல், ஓலைச்சுவடிகளின் எழுத்துக்கள் நன்றாகத் தெரியும்படி அவற்றை மின்பதிவு (digitalize)என்ற முறையில் செயல்பாடுகள் இருக்கின்றன.
(பின்குறிப்பு) பொதுமக்கள் தங்களிடம் ஓலைச்சுவடிகள் இருந்தால் இந்த அமைப்பிடம் (CTMR)கொடுக்கலாம். அவர்களும் அதில் மருத்துவசம்பந்தமான குறிப்புகள் இருந்தால் அவற்றை மின்பதிவு செய்துவிட்டு ஓலைச்சுவடிகளை திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். மருத்துவ குறிப்புகள் இல்லாத சுவடிகளை அவை எது சம்பந்தப்பட்டது (ஆலயம்,மாந்திரிகம்,மற்றபிற செய்திகள்) என்று மட்டும் சொல்வார்கள். அதற்கு விளக்கம் சொல்லவோ அல்லது மின்பதிவு செய்து தருவதோ கட்டாயமாக இயலாது என்பது குறிப்பிடப்படவேண்டிய செய்தியாகும்.
===================================================
CTMR ஆராய்ச்சி மையம், ஆரோக்கிய மையங்கள் தவிர நடமாடும் மருத்துவமனைகளையும் நடத்துகிறது. சர்வசிக்ஷா அபியான் மூலமாக 15000 குறுந்தகடுகள் பள்ளிக் குழந்தைகளுக்கு விநியோகிக்கப்பட்டு இருக்கிறது.
இது தவிர மருத்துவர்களுக்கான கருத்து அரங்கம், கருத்து பரிமாறும் அரங்குகள், அவர்களுக்கான பயிற்சி பட்டறை ஆகியவையும் CTMR ஆல் நடத்தப்படுகின்றன. CTMR வீட்டுத் தோட்டம், பள்ளித் தோட்டம் மற்றும் மூலிகை தோட்டங்கள் அமைக்க உதவுகிறது. இது சம்பந்தமான சான்றிதழ்கள் இந்திய அரசு, இந்திராகாந்தி பல்கலைக்கழகம் (IGNOU), இந்திய தரக்கட்டுபாட்டு மையம் ஆகியவற்றுடன் இணைந்து வழங்கப்படுகிறது. மேலும் ஜனரஞ்சகமான பத்திரிகைகள், ஆய்வு கட்டுகரைகளை வெளியிடும் மருத்துவ இதழ்கள் மூலமாக தரமான மருத்துவ கட்டுரைகளும், மருத்துவ ஆலோசனைகளும் வெளியிடப்படுகிறது.
தரமான மருந்துகளை தயாரிக்கவும், தரமான மூலப்பொருட்களை உபயோகப்படுத்தி தயாரிக்கவும் வழிமுறைகள் இங்கு கற்றுத் தரப்படுகிறது. சரியான உபகரணங்களை உபயோகித்து மருந்துகள் தயாரிக்கவும் கற்றுத் தரப்படுகிறது.
நோக்கம் நல்லதாக இருக்கும் பொழுது இணைந்து செயல்பட எல்லோரும் வருவது இயற்கைதானே இப்படித்தான் இந்திய அரசாங்கமும், தமிழ்நாடு இன்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் (TIIC) ஆகியவை பெருமளவில் CTMR ன் வளர்ச்சி பணிகளில் உதவி புரிகின்றன. கணவாய்புதூரில் உள்ள AMR நிறுவனம் சேலம் சாரதா நிகேதன் கல்லூரியில் ஒரு மருத்துவரை நியமித்து பொது மக்களுக்கு CTMR மூலமாக மருத்துவ சேவை செய்து வருகிறது.
AIM for Seva என்ற அமைப்பு தயானந்த சரஸ்வதி அவர்களின் உதவியுடன் மிகச் சிறப்பாக நடக்கிறது. ஆனைகட்டியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு மருத்துவ பயிற்சியும் தங்களை தற்காத்துக் கொள்ள முதலுதவி பயிற்சியும் கொடுக்கப்படுகிறது.
ஆதிவாசிகளில் இருக்கும் முப்பத்து ஆறு இனங்களில் இருளர்கள், குறும்பர்கள், காட்டு நாயக்கன் ஆகியவர்களை தங்களுடைய ஆய்வுக்காக இவர்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். ஆங்கிலேயர்களின் ஆதிக்க காலத்தில் இருந்தே ஆம்பூர், வாணியம்பாடி, ராணிபேட்டை குடியாத்தம் ஆகிய ஊர்களில் தோல் தொழிற்சாலைகளும், பீடி சுற்றும் தொழிற்சாலைகளும் பெருமளவில் இருந்து வருகின்றன.
இந்த தொழிற்சாலைகளால் காற்றும், தண்ணீரும் மிகவும் மாசுபடுகிறது. இதனால் இங்குள்ள மக்களின் ஆரோக்கியம் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இங்குள்ள மக்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட இந்த நிறுவனம் பல முயற்சிகளை செய்து வருகிறது. இன்னும் பல வழிகளில் செயல்படும் இவர்களின் செயல்பாட்டை மேலும் பார்ப்போம்.
==================================================
ஆங்கில மருந்துகள்தான் உடனடியாக நிவாரணம் தரும், சித்தமருந்துகள் சாப்பிட்டால் குணமாக நாளாகும், பத்தியம் எல்லாம் வேற இருக்கணும் என்கிற எண்ணம்தான் மக்களிடையே பரவலாக இருக்கிறது. ஆனால் அடிப்படையான ஆரோக்கியம் சித்தா முறையில் பாதுகாக்கப்படுமானால் மற்ற மருந்துகளின் உபயோகம் வெகுவாக குறைந்துவிடும் என்பதுதான் உண்மை. CTMR இந்த நிலையை பொதுமக்கள் உணரவேண்டும் என்பதற்காக பெருமளவில் முயற்சி எடுத்துக் கொண்டுள்ளது.
அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லாத, படிப்பறிவும் இல்லாத மீனவ சமூகத்தினரை CTMR அணுகிய விதம் தான் மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒரு செய்தியாகும். CTMR ன் மருத்துவர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று வீட்டில் உள்ள பொருட்களின் மருத்துவகுணங்களை எடுத்துச் சொல்லி புரியவைத்து அவற்றை உபயோகிக்கும் முறையையும் கற்றுத் தந்து இருக்கிறார்கள். அங்குள்ள 10வது படிக்கும் மாணவர்களை சளி, காய்ச்சல், வாந்தியெடுத்தல், பாம்பு கடித்தல் போன்றவைகளுக்கு அவர்களிடமே மருந்துகளைக் கொடுத்து சரிசெய்யும் வண்ணம் தயார் செய்து வைத்து இருக்கிறார்கள்.
தொற்று நோய்களான பறவைக் காய்ச்சல், டெங்கு, மலேரியா, காலரா போன்றவற்றிற்கு சித்தாவில் தான் மிகச்சிறந்த மருந்துகள் இருக்கிறது. ஆங்கில மருத்துவர்கள் கூட டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீரை தானே மருந்தாக கொடுத்தார்கள். ஆங்கில மருத்துவமும், சித்தமருத்துவமும் ஒன்றுக்கொன்று போட்டியானது என்று நினைப்பதை தவிர்க்கவேண்டும். எந்த நோய்க்கு என்ன மருந்து கொடுத்தால் குணமாகும் என்றுதான் யோசிக்க வேண்டும்.
நேரம் தவறிய, முறையற்ற பழக்கத்தினால் ஏற்படும் உடற்பருமனுக்கு சித்தவைத்தியம் மிகச்சிறந்தது. இம்மருந்துகள் சாப்பிடும் பொழுது செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை என்று மருத்துவர் சொற்படி கேட்டு நடந்தால் பூரண குணம் கிடைக்கும் என்பதுதான் உண்மை.
ஒரு மருத்துவர் ஒரு நாளில் செவிலியின் உதவியுடன் 30 நோயாளிகளைப் பார்ப்பது என்பது நோயுற்றவர்களின் நிலைமையை நன்கு கணித்து மருத்துவ உதவி செய்ய வசதியாக இருக்கும் என்று CTMRநிறுவனம் நினைப்பது சரிதான். வேண்டுமெனில் மருத்துவர்களை அதிகப்படுத்திக் கொள்ளலாமே தவிர, மருத்துவர் நோயாளிகளை அதிகப்படுத்திக் கொள்ளக்கூடாது. (நான் முதல்வாரத்தில் கூறியபடி நிறைய கூட்டம் வந்தால் மருத்துவர் மிகக் கெட்டிக்காரர் என்ற எண்ணம் தவறானது)
CTMRன் கவனிப்பால் இப்பொழுது மீனவ சமுதாயத்தினர், மிக எளிதான வழிமுறைகளைப் பின்பற்றி எளிதில் காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம் போன்ற நோய்களில் இருந்து தங்களை குணப்படுத்திக் கொள்ளுகின்றனர். ஆவிபிடித்தல், வீட்டில் உள்ள மஞ்சள் போன்ற சமையல் பொருள்களை வைத்து பற்றுஇடுதல், வயிற்று உபாதைகளுக்கு பெருங்காயம், ஆடாதொடா இலையின் கொதிநீர் (கஷாயம்) ஆகியவைகளை உபயோகிக்க ஆரம்பித்து இருக்கின்றனர்.
மில்லட்ஸ் என்று சொல்லப்படும் சிறுதானியங்களின் பயன்பாடு இவர்களால் பெரிதும் பரிந்துரைக்கப்படுகிறது. முறையாக இவற்றை உபயோகிக்கும் பொழுது தேவையற்ற உடல்பருமன், கருப்பை நீர்கட்டி, மாதவிடாய் கோளாறுகள் பெருமளவில் சரியாகின்றன. இவற்றின் பயன்பாட்டை வரும் தொடர்களில் தெரிந்துகொள்வோம்.
====================================
சித்தமருத்துவத்தை பொறுத்தவரையிலும் பஞ்சபூதங்களும், அறுசுவைகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவையாகக் கருதப்படுகிறது.
இனிப்பு – மண்ணும் நீரும்
துவர்ப்பு – மண்ணும் காற்றும்
கசப்பு – காற்றும் ஆகாயமும்
புளிப்பு – மண்ணும் தீயும்
உப்பு – நீரும் தீயும்
காரம் – காற்றும் தீயும்
என்ற வகையில் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. எனவே இனிப்பு சாப்பிடும் பொழுது கபம், கசப்புடன் வாதமும், தீயுடன் பித்தமும் உருவாகும் என்று சொல்லப்படுகிறது. கலோரி என்ற ஒரு உணவின் சத்து அளவு இன்றைக்கு வெகுவாகப் பேசப்படுகிறது. இந்த அளவுடன் கூட சித்த மருத்துவம் ஒவ்வொரு உணவுப் பொருளில் உள்ள நிறமூட்டி (Colour), மணமூட்டி (Flavour), சுவையூட்டி(Smell or taste) இவைகளைக் கொண்டே உணவின் உபயோகத்தையும் கலோரியையும் நிர்ணயிக்கிறது.
இந்த வகையில் சிறுதானியங்கள்(Minor Millets) என்று சொல்லப்படும் வகைகளை நாம் ஒதுக்கியே வைத்து இருந்தோம். அவை ஏழைகளின் உணவு, சமைக்கும் முறை கடினமானது. இதை சாப்பிடுவது மேல்தட்டு மக்களுக்கு உகந்தது இல்லை என்ற எண்ணம்தான் இருந்தது. ஆனால் இன்றைய மாசு நிறைந்த சூழலில் இந்த வகை சிறுதானிய உணவுகள்தான் நம்மை காப்பாற்றும் என்ற உண்மையை நாம் புரிந்து கொண்டுவிட்டோம்.
சிறுதானியங்கள் என்பது என்ன என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
கம்பு – Pearl millet
வரகு – Kodo Millet
தினை – Fox millet
ராகி – Finger Millet
சோளம் – Jovar Millet
சாமை – Little Milliet
குதிரைவாலி – Banyard Millet
இவற்றின் குணங்களாக சித்தமருத்துவம் கூறுவது.
ராகி – வயிற்று உபாதை (Abdominal Pain), வாதபித்தத்தை சரிசெய்யும்.
கம்பு – உடலின் உள் கொதிப்பை அகற்றி வலுவைக் கொடுக்கும்.
தினை- புரதமும், சுண்ணாம்பும் பெருமளவில் உள்ள தானியம். கபம், குளிர் காய்ச்சலைப் போக்கக் கூடியது, எலும்பு தேய்மானத்தை குறைக்கும், எலும்புமுறிவு (Fracture) குணமாவதை துரிதப்படுத்தும்.
சாமை – ஆயுர்வேதத்தில் சாமை ராசதான்யம் என்று சொல்லப்படுகிறது. வாதம், காய்ச்சல்(Fever) சமனப்படுத்தி உடல் எடையைக் குறைக்கும்.
சோளம் – சோறாகவும், உப்புமா, பொங்கல் போன்றவை செய்ய உகந்தது. உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும். இனிப்பும், துவர்ப்பும் கலந்த ஒரு சிறந்த தானியம்.
வரகு – சர்க்கரைவியாதி (diabetic) உள்ளவர்களின் நண்பன் இந்த வரகாகும். கபத்தையும் கட்டுப்படுத்தும் அதிக அளவில் நார்ச்சத்து (fibre) நிறைந்த பொருள் இது.
குதிரைவாலி – அடிப்படையில் சாமையைப் போன்ற தானியம் இது. உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சாமையின் குணங்கள்தான் இந்த தானியத்திற்கும். இவை அனைத்தும் வறண்ட தண்ணீர் குறைவான பிரதேசங்களில் எளிதில் பயிடக்கூடிய தானியவகைகள் ஆகும்.
=====================================================
இந்தத் தொடரில் வரும் சில அத்தியாயங்களுக்கு சிறுதானிய உணவுகள் குறித்து அறிமுகம் தரப்படும்.
சிறுதானிய அடை
தேவையான பொருட்கள்:
சோளம் -2 தேக்கரண்டி
கம்பு – 2 தேக்கரண்டி
கொள்ளு – 2 தேக்கரண்டி
தினை – 2 தேக்கரண்டி
ராகி -2 தேக்கரண்டி
ஓமம் – ½ தேக்கரண்டி
மிளகுத்தூள் – ½ தேக்கரண்டி
சுக்குப் பொடி -½ தேக்கரண்டி
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
நறுக்கிய வெங்காயம் – தேவையான அளவு
கருவேப்பிலை, கொத்தமல்லி இலை – தேவையான அளவு
நறுக்கிய காய்கறிகள் -தேவையான அளவு
(காரட், பீன்ஸ், காளிஃப்ளவர்,பச்சை பட்டாணி)
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
இரவில் ஊறவைத்த சிறுதானியங்களை, அடைமாவு பதத்திற்கு அரைக்க வேண்டும். இதனுடன் எண்ணெய் தவிர, மேலே கொடுக்கப்பட்ட மீதமுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து கலக்க வேண்டும். இதனை தோசைக்கல்லில் சிறிய அடையாக ஊற்றி அதனைச் சுற்றி எண்ணெய் விட்டு மூடி வைக்க வேண்டும். வெந்தவுடன் இதனை சூடாக பரிமாறவும் இதற்கு எந்த சட்னியும் தேவையில்லை.
குதிரைவாலி உப்புமா
தேவையான பொருட்கள்:
குதிரைவாலி – 100 கிராம்
வெங்காயம் (நறுக்கியது)- 1
பச்சைமிளகாய்(நறுக்கியது) -1
இஞ்சி (நறுக்கியது) – 5 கிராம்
கருவேப்பிலை – தேவையான அளவு
கொத்தமல்லி – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கலந்த காய்கறிகள் (நறுக்கியது) – 1 கோப்பை
(காரட், பீன்ஸ், பச்சை பட்டாணி,காளிஃப்ளவர்)
செய்முறை:
குதிரைவாலியை நன்றாக பொரிந்து வரும் வரை நன்றாக வறுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.
ஒரு வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் கடுகு மற்றும் உளுந்தம்பருப்பை சேர்த்து பொரிந்தவுடன் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி இலை, கலந்த காய்கறிகள் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும். ஒரு கோப்பை தானியத்திற்கு 4 கோப்பை என்ற அளவிற்கு தண்ணீரை இதனுடன் சேர்த்துக்கொண்டு சிறிது உப்பு சேர்த்து நன்றாக வேகவைக்கவும். கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது வறுத்த குதிரைவாலியை சேர்த்து சிறுஅனலில் வைக்கவேண்டும். அதனை மூடிவைத்து 15 நிமிடங்கள் கழித்து எடுக்க வேண்டும். வழக்கமாக நாம் செய்யும் ரவை உப்புமாவை விட இந்த உப்புமா வேக சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். 15 நிமிடங்கள் கழித்து அடுப்பிலிருந்து இறக்கி சூடாக பரிமாறவும்.
சாமை பொங்கல்
தேவையான பொருட்கள்:
சாமை – 100 கிராம்
பச்சை பயிறு -50 கிராம்
இஞ்சி – 5 கிராம்
பச்சை மிளகாய் -1
உப்பு – தேவையான அளவு
நெய் – 1 தேக்கரண்டி
மிளகு மற்றும் சீரகம் – ½ தேக்கரண்டி
கருவேப்பிலை – தேவையான அளவு
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
பெருங்காயத்தூள்- ஒரு சிட்டிகை
செய்முறை:
சாமையையும், பச்சை பயிறையும் நன்றாக கழுவி 10 நிமிடங்கள் ஊறவைக்கவேண்டும். ஒரு கோப்பை தானியத்திற்கு 4 கோப்பை தண்ணீர் என்ற அளவிற்கு தண்ணீரை சேர்த்துக்கொள்ளவேண்டும். கடைசியாக இத்துடன் நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய் மற்றும் உப்பு சேர்க்க வேண்டும். இக்கலவையை அவிப்பானிற்கு (குக்கர்) மாற்றி, நன்றாக பொங்கல் போல வேகவைக்க வேண்டும்.
ஒரு வாணலியில் 1 தேக்கரண்டி நெய் ஊற்றி மிளவு, சீரகம், கருவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். இதனை மேற்சொன்ன பொங்கலுடன் சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்.
கேழ்வரகு ரொட்டி(கட்லட்)
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு (வேகவைத்து மசித்தது) – 1
கேழ்வரகு மாவு – 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் -1 இஞ்சி – 5கிராம்
கருவேப்பிலை – தேவையான அளவு
கொத்தமல்லி இலை – தேவையான அளவு
வெங்காயம் (நறுக்கியது) – 1 (தேவையெனில்)
எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து மென்மையாக கலக்க வேண்டும். தேவையெனில் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். சிறிய ரொட்டி (கட்லட்) வடிவத்தில் செய்து, தோசைகல்லில் இட்டு முழுவதுமாக வெந்தவுடன் எடுத்துவிடலாம். வேகும் பொழுது சிறிதளவு எண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். சாப்பிட ருசியாக இருக்கும்.
===================================================
தினை லட்டு
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைத்த தினை மாவு (நரிவால் தினை)– 1 கோப்பை
பொடித்த வெல்லம் – ½ கோப்பை
நெய் – 3 தேக்கரண்டி
திராட்சை மற்றும் முந்திரிபருப்பு – தேவையான அளவு
ஏலக்காய் பொடி – 2 சிட்டிகை
செய்முறை:
வறுத்து அரைத்த தினை மாவு, பொடித்த வெல்லம், ஏலக்காய் பொடி இவற்றை கலந்து வைத்துக்கொள்ளவேண்டும். ஒரு வாணலியில் 3 தேக்கரண்டி நெய் ஊற்றி அதில் திராட்சை மற்றும் முந்திரிபருப்பை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும். பின் இதனை கலந்து வைத்துள்ள தினை மாவுடன் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக செய்தால் சுவையான தினை லட்டு தயாராகிவிடும்.
கேழ்வரகு இடியாப்பம்
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு – 1 கோப்பை
அரிசி மாவு – 1கோப்பை
உப்பு – தேவையான அளவு
சூடான தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
கேழ்வரகு மாவு, அரிசி மாவு மற்றும் தேவையான அளவு உப்பும் கலந்து சூடான தண்ணீர் சேர்த்து மென்மையாக பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும். இதிலிருந்து இடியாப்பம் தயார் செய்யலாம். இதனை ஓமவல்லி பச்சடியுடன் சூடாக பரிமாறவும்.
உளுந்தங்களி
தேவையான பொருட்கள்:
உளுந்தம்பருப்பு – 2 கோப்பை
வெல்லம் – 50 கிராம்
நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி
செய்முறை:
உளுந்தம்பருப்பை 2 மணிநேரம் ஊறவைத்து பின் நன்றாக அரைத்துக்கொள்ளவும். இதனுடன் வெல்லத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனை ஒரு வாணலியில் மாற்றி வெல்லம் நன்கு கரையும் வரையிலும் உளுந்தமாவு நன்றாக வேகும் வரையிலும் அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவேண்டும். கடைசியாக 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து சூடாக பரிமாறவும்.
நெல்லிக்காய் பச்சடி
தேவையான பொருட்கள்:
பெரிய நெல்லிக்காய் (கொட்டை நீக்கியது) – 2
பச்சைமிளகாய் சிறியது – 1
இஞ்சி – 5 கிராம்
தயிர் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
நெல்லிக்காய், பச்சைமிளகாய், இஞ்சி இதனை அம்மியில் இட்டு ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ளவும். பின் அதனை ஒரு கிண்ணத்தில் மாற்றி உப்பு மற்றும் தயிர் கலந்து பரிமாறவும்.
=============================================
தினை பாயசம்
தேவையான பொருட்கள்:
தினை (வறுத்து பொடி செய்தது) – ஒரு கோப்பை
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
பச்சைப் பயிறு – 1 தேக்கரண்டி
வெல்லம் – தேவையான அளவு
ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை
முந்திரிபருப்பு – 1 தேக்கரண்டி
உலர் திராட்சை -1 தேக்கரண்டி
நெய் – 1 தேக்கரண்டி
காய்ச்சிய பால் – ½ கோப்பை
செய்முறை:
கடலைப்பருப்பு மற்றும் பச்சைப் பருப்பு இவ்விரண்டையும் வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். இதனுடன் தினை கலந்து 4 கோப்பை தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்கள் வேக வைக்கவேண்டும். பின் பொடித்து வைத்த வெல்லம், ஏலக்காய் பொடி சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும். கடைசியாக ½ கோப்பை பால் சேர்த்து இறக்கிவிடவும். பின் நெய்யில் வறுத்த உலர் திராட்சை மற்றும் முந்திரி பருப்பை சேர்த்தால் சுவையான தினை பாயசம் தயார். இதனை சூடாக பரிமாறவும்.
மாதுளை மனப்பாகு
தேவையான பொருட்கள்:
மாதுளை சாறு – ½ கோப்பை
சர்க்கரை – 1 கோப்பை
சுக்கு (பொடி செய்தது) – ½ தேக்கரண்டி
செய்முறை:
மாதுளை சாறு மற்றும் சர்க்கரை சேர்த்து வேகவைக்கவேண்டும். மிதமான சூட்டில் வைத்து தொடர்ந்து கிளறிக்கொண்டிருக்க வேண்டும். ஓரளவுக்கு கெட்டியாக வரும் பதத்தில் இறக்கிவிடவும். கடைசியில் சுக்குப்பொடியை சேர்த்தால் சுவையான மாதுளை மனப்பாகு தயார்.
ஓமவல்லி பச்சடி
தேவையான பொருட்கள்:
ஓமவல்லி இலை – 4
உளுந்தம் பருப்பு – ½ தேக்கரண்டி
பச்சைமிளகாய் சிறியது – 1
இஞ்சி – 5 கிராம்
துருவிய தேங்காய் (தேவையெனில்) – ½ தேக்கரண்டி
தயிர் – 2 தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு – ½ தேக்கரண்டி
சீரகம் – ½ தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
செய்முறை:
உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள், துருவிய தேங்காய், பச்சைமிளகாய் ஆகியவற்றை செந்நிறமாகும் வரை வறுத்து அரைத்துக்கொள்ளவேண்டும்.
சுத்தம் செய்த ஓமவல்லி இலையை சிறிது எண்ணெய் ஊற்றி சுருங்கும் வரை வதக்க வேண்டும். இதனுடன் அரைத்துவைத்த பொடியை சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைக்க வேண்டும். பின் தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும். கடைசியாக கடுகு மற்றும் சீரகம் சேர்த்து தாளித்து இதனுடன் சேர்க்க வேண்டும். தாளிக்காமலும் இதனைப் பரிமாறலாம்.
பிரண்டை சட்னி
தேவையான பொருட்கள்:
பிரண்டை – 1 சிறிய கோப்பை
(முனைகளை நீக்கி நறுக்கியது)
உளுந்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
புளி – 20 கிராம்
இஞ்சி – 5 கிராம்
மிளகு – 4
காய்ந்த மிளகாய் – 3
கறுப்பு எள் – 1தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
பிரண்டை இலையை ½ தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு நன்கு வதக்க வேண்டும்.
உளுந்தம்பருப்பு, இஞ்சி, எள், மிளகாய், மிளகு சேர்த்து நன்கு தனியாக வறுக்க வேண்டும்.
வதக்கிய இலையை வறுத்த பொருட்களுடன் புளி மற்றும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்க வேண்டும். தேவையெனில் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
கீழ்வாதத்திற்கு இது மிகவும் உகந்தது.
முடிவுரை:
திருமூலரின் திருமந்திரத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் சித்தமருத்துவம். வாழ்க்கை முறையும் உணவு பழக்கமும் ஓரளவு நெறிமுறைப்படுத்தப்படவேண்டும் என்று சித்தமருத்துவம் கூறுகிறது. மனஅழுத்தம்(Stress) என்பது இன்றைய நாளில் ஒரு பரீட்சயமான வார்த்தையாகிவிட்டது. இந்த மனஅழுத்தத்தை அறவே குறைக்கும் வழியை நாடு, அல்லது மனஅழுத்தத்தை குறைக்கும் மாற்றுவழியைத் தேடு என்று சொல்வதும் இந்த மருத்துவ முறைதான். அசுவகந்தா சூரணம், மன அழுத்தத்தைக் குறைக்கும் ஒரு நல்ல மருந்தாகும்.
எந்த மருத்துவமுறையும் முழுமையானது அல்ல என்பதுதான் உண்மையான நிலையாகும். எனவே மருத்துவமுறைகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று உதவிடும் வகையிலும் (Complementary Approach) ஒருங்கிணைந்த சிகிச்சை என்ற முறையிலும் (Integrated Approach) வருவது பொதுமக்களுக்கு நன்மையளிக்கும். எனவே நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற ஆன்றோர் வாக்குப்படி ஆரோக்கியமாக, இயற்கையோடு இணைந்த வாழ்க்கைமுறையை வாழ அனைவரும் முயற்சி செய்வோம்.
நன்றி :-ஜெயாசுந்தரம் @ http://siragu.com/

No comments:

Post a Comment